Kovil

யாழ். தெல்லிப்பளை அருள்மிகு ஸ்ரீ துர்க்காதேவி திருக்கோயில்

Posted on

வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம், தெல்லிப்பளை அருள்மிகு ஸ்ரீ துர்க்காதேவி திருக்கோயில்

தெல்லிப்பளை நற்பதியில் கோயில் கொண்ட தாயே
துயர்களைந்து நலமளிக்க விரைந்துவா அம்மா
மனமகிழ்ச்சி தந்தெம்மை வாழவைக்க வேண்டும்
வட இலங்கை வீற்றிருக்கும் துர்க்காதேவி அருள்வாய்

அருள் பொழிந்து அகிலத்தை ஆளுகின்ற தாயே
ஆதரித்து அரவணைக்க விரைந்துவா அம்மா
வளம் பெற்ற வாழ்வு தந்து வாழவைக்க வேண்டும்
வட இலங்கை வீற்றிருக்கும் துர்க்காதேவி அருள்வாய்

ஆற்றல் தந்து வழிநடத்தி வாழவைக்கும் தாயே
அனுதினமும் எமைக்காக்க விரைந்துவா அம்மா
தளராத மனத்துடனே வாழவைக்க வேண்டும்
வட இலங்கை வீற்றிருக்கும் துர்க்காதேவி அருள்வாய்

நல்லருளைத் தந்தருளி நலமளிக்கும் தாயே
நாளும் பொழுதும் எமைக் காக்க விரைந்துவா அம்மா
திடங் கொண்ட மனத்துடனே வாழவைக்க வேண்டும்
வட இலங்கை வீற்றிருக்கும் துர்க்காதேவி அருள்வாய்

செழுமை மிகு வாழ்வளித்து காக்கின்ற தாயே
செய் தொழில்கள் சிறப்படைய அருளிடவே விரைந்துவா அம்மா
உடல் நலமும், உளநலமும் சீர்பெறவே வாழவைக்க வேண்டும்
வட இலங்கை வீற்றிருக்கும் துர்க்காதேவி அருள்வாய்

ஆணவத்தை அழித்தொழித்து அரவணைக்கும் தாயே
நேர்மையுடன் நாம்வாழ அருளிடவே விரைந்துவா அம்மா
தொல்லையண்டா வாழ்வு பெற்று வாழவைக்க வேண்டும்
வட இலங்கை வீற்றிருக்கும் துர்க்காதேவி அருள்வாய்.

ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

Exit mobile version