Kovil
முல்லைத்தீவு, முறிகண்டி – அருள்மிகு விநாயகப் பெருமான் திருக்கோயில்
வடமாகாணம் – முல்லைத்தீவு மாவட்டம், முறிகண்டி – அருள்மிகு விநாயகப் பெருமான் திருக்கோயில்
முறிகண்டி தனிலிருந்து அருள் வழங்கும் பெருமானே
வரும் துயர்கள் போக்கிவிடும் வல்லமையை அருளைய்யா
கொடுநிலைகள் பல சூழ்ந்து கொல்லுதைய்யா எம் மனத்தை
நிம்மதியைப் பெற்றிடவே எமக்கு வரம் தந்திடைய்யா
இதயம் போன்றிருக்கும் இடம் கொண்ட நாயகனே
எம்துயரம் போக்கிவிட விரைந்தோடி வந்திடைய்யா
கானகத்தே தனித்திருந்து வழிகாட்டும் பெருமானே
திக்கின்றித் தவிக்கின்றோம் வழிகாட்டி விட்டிடைய்யா
ஆற்றாது அரற்று வோர் வேதனையை உணர்ந்திடைய்யா
ஆழ்கடலில் பரிதவிக்கும் படகு போல் ஆனோமே
திசை காட்டி வழி நடத்த
உன்னருளை நாடி நிற்கின்றோம் வழிகாட்டி அருளிடைய்யா
வன்னிப் பெருநிலத்தில் கோயில் கொண்ட பெருமானே
வருந் துயர்கள் தடுத்திடவே உரிய வழி காட்டிடைய்யா
வேதனைகள் அண்டாத வாழ்வை நீ தந்திடைய்யா
உன்னைச் சரணடைந்தோம் எமக்குத் துணையிருந்திடைய்யா
வாழ்க்கைத் துணையாக இருந்து வழி காட்டிடைய்யா
வழித்துணையாய் உடனிருந்து காவலும் செய்திடைய்யா
அச்சமில்லா நிம்மதியை என்றும் நீ தந்திடைய்யா
முறிகண்டி உறைகின்ற பிள்ளையாரே துணையிரைய்யா
எதிர்காலம் ஒளி பெறவே உரிய வழி திறந்திடைய்யா
உற்றாரும் உறவினரும் இணைந்திருக்கச் செய்திடைய்யா
உடல் நலமும் உளநலமும் உறுதிபடல் வேண்டுமைய்யா
வேதனைகள் போக்கியெம்மை மகிழ்ச்சியைறச் செய்வாயைய்யா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.