Kovil

கொழும்பு முகத்துவாரம் அருள்மிகு ஸ்ரீ வெங்கடேஸ்வர மகா விஷ்ணு திருக்கோயில்

Posted on

மேல்மாகாணம் – கொழும்பு மாவட்டம் கொழும்பு மாநகரம் முகத்துவாரம் அருள்மிகு ஸ்ரீ வெங்கடேஸ்வர மகா விஷ்ணு திருக்கோயில்

 

ஆழி அலை மோதுமிடம் கோயில் கொண்ட பெருமாள்
ஆழ் துயிலை விட்டெழுந்து எமக்கருள வரவேண்டும்
அச்சமின்றி அமைதியாய் நாம் வாழ வழி வேண்டும்
முகத்துவாரம் இருந்தருளும் வெங்கடேஸ்வரப் பெருமாளே சரணம் ஐயா

மேற்கிலங்கை கரையினிலே வீற்றிருக்கும் பெருமாள்
மேதினியில் எம் வாழ்வு சிறப்படைய எமக்கருள வரவேண்டும்
நிம்மதியாய் நிரந்தரமாய் நாம் வாழ வழி வேண்டும்
முகத்துவாரம் இருந்தருளும் வெங்கடேஸ்வரப் பெருமாளே சரணம் ஐயா

பாற்கடலில் பள்ளி கொண்டு பாராளும் பெருமாள்
பாரினிலே பெருமையுடன் வாழ நல்லருள் நல்க வேண்டும்
பங்கமின்றி நிம்மதியாய் நாம் வாழ வழி வேண்டும்
முகத்துவாரம் இருந்தருளும் வெங்கடேஸ்வரப் பெருமாளே சரணம் ஐயா

காக்கும் கடமை கொண்ட கார்வண்ணப் பெருமாள்
நீக்கமற எங்கும் நிறைந்திருந்து எமக்கருள வரவேண்டும்
நிலை குலையா உறுதியுடன் நாம் வாழ வழி வேண்டும்
முகத்துவாரம் இருந்தருளும் வெங்கடேஸ்வரப் பெருமாளே சரணம் ஐயா

அறம் காக்க மறமழிக்க அவதரிக்கும் பெருமாள்
அகிலத்தில் நல்லமைதி காத்திடவே வரவேண்டும்
அஞ்சும் நிலை இன்றி நாம் வாழ வழி வேண்டும்
முகத்துவாரம் இருந்தருளும் வெங்கடேஸ்வரப் பெருமாளே சரணம் ஐயா

தோல்வி நிலை தோற்கடிக்க அருளுகின்ற பெருமாள்
தொல்லையின்றி நாம்வாழ எமக்கருள வரவேண்டும்
தொய்வில்லா மகிழ்வுடனே நாம் வாழ வழி வேண்டும்
முகத்துவாரம் இருந்தருளும் வெங்கடேஸ்வரப் பெருமாளே சரணம் ஐயா.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

Exit mobile version