Kovil

பசறை – அம்முனிவத்தை அருள்மிகு ஸ்ரீ முருகன் திருக்கோயில்

ஊவா மாகாணம்- பதுளை மாவட்டம்- பசறை – அம்முனிவத்தை அருள்மிகு ஸ்ரீ முருகன் திருக்கோயில்

வளங்கொண்ட மலையகத்தில் வந்தமர்ந்த வேல்முருகா
வழிந்தோடும் உன்னருளில் நாம் பயனடைய வேண்டும் ஐயா
வெற்றிகளைத் தந்தெம்மை தலைநிமிர்ந்து வாழச்செய்வாய்
பசறையிலே கோயில் கொண்ட பார்வதியின் திருமகனே

வேல் தாங்கி நின்றிருந்து உலகாளும் வேல்முருகா
வீரமிகு உன் அருளால் நாம் வெற்றிகள் அடைய வேண்டும் ஐயா
வேதனைகள் அகற்றியெம்மை நிம்மதியாய் வாழச்செய்வாய்
பசறையிலே கோயில் கொண்ட பார்வதியின் திருமகனே

குன்றின் மேல் கோயில் கொண்டு குவலயத்தைக் காக்கும் வேல்முருகா
குற்றமில்லா வாழ்வு கொண்டு நாம் பயனடைய வேண்டும் ஐயா
காவல் தந்து எம்மையென்றும் அமைதியாய்வாழச்செய்வாய்
பசறையிலே கோயில் கொண்ட பார்வதியின் திருமகனே

சேவற் கொடி தாங்கி சீர்வாழ்வு தரும் வேல்முருகா
சோர்வில்லா வாழ்வு பெற்று நாம் பயனடைய வேண்டும் ஐயா
சொந்தங்கள் சேர்ந்து மகிழ்வுடன் வாழச்செய்வாய்
பசறையிலே கோயில் கொண்ட பார்வதியின் திருமகனே

சூரனை அடக்கி அருள் தந்த வேல்முருகா
சூழல் சீராக இருந்து நாம் பயனடைய வேண்டும் ஐயா
சுதந்திரமாய் நாமென்றும் சீராக வாழச் செய்வாய்
பசறையிலே கோயில் கொண்ட பார்வதியின் திருமகனே

கந்தனென்றும், வேலனென்றும் பெயர் கொண்ட வேல்முருகா
கரவில்லா வாழ்வுடனே நாம் பயனடைய வேண்டும் ஐயா
கொடுமைகள் அண்டாது எம்மை நிம்மதியாய் வாழச்செய்வாய்
பசறையிலே கோயில் கொண்ட பார்வதியின் திருமகனே.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top