Kovil

யாழ். சாவகச்சேரி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோயில்

Posted on

வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம், சாவகச்சேரி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோயில்

மலர் போன்ற திருப்பாதம் கொண்டவளே தாயே
மலரடியைத் தொழுது நிற்போம் நாங்கள்
வளங்கொண்ட நல்வாழ்வை எமக்கருள வேண்டும்
சாவகச்சேரியில் இருந்தருளும் முத்துமாரி அம்மாவே அருள்வாய்

துணிவுதந்து துயர் போக்கும் திருமகளே தாயே
தொல்லையில்லா நிம்மதியைத் தேடுகிறோம் நாங்கள்
மகிழ்வு தரும் பெருவாழ்வை எமக்கருள வேண்டும்
சாவகச்சேரியில் இருந்தருளும் முத்துமாரி அம்மாவே அருள்வாய்

இன்பமிகு வளவாழ்வை எமக்கருளும் தாயே
இடரில்லா உயர்வாழ்வை நாடுகின்றோம் நாங்கள்
உறுதி கொண்ட மனநிலையை எமக்கருள வேண்டும்
சாவகச்சேரியில் இருந்தருளும் முத்துமாரி அம்மாவே அருள்வாய்

தூயமனம் கொண்டுறையும் திருமகளே தாயே
தீமைகள் அண்டாத நன்னிலையை நாடுகின்றோம் நாங்கள்
நோயற்ற உடல் வலிமை எமக்கருள வேண்டும்
சாவகச்சேரியில் இருந்தருளும் முத்துமாரி அம்மாவே அருள்வாய்

வட இலங்கை கோயில் கொண்டு வளமளிக்கும் தாயே
வற்றாதவுன் கருணை நாடுகின்றோம் நாங்கள்
வீரமிகு மனவுறுதி எமக்கருள வேண்டும்
சாவகச்சேரியில் இருந்தருளும் முத்துமாரி அம்மாவே அருள்வாய்

தளராத மனம் தந்து வாழ வைக்கும் தாயே
திரண்டு வரும் உன் கருணை நாடுகின்றோம் நாங்கள்
தொய்வின்றி உன் அருளை எமக்கருள வேண்டும்
சாவகச்சேரியில் இருந்தருளும் முத்துமாரி அம்மாவே அருள்வாய்.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

Exit mobile version