Kovil
யாழ். திருநெல்வேலி அருள்மிகு காயாரோகண சிவன் திருக்கோயில்
வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம், திருநெல்வேலி அருள்மிகு காயாரோகண சிவன் திருக்கோயில்
ஆக்கி காத்து அழித்து அருளுகின்ற சிவனே
ஆதரவு தந்துலகை காத்தருளும் பெருமானே
அச்சமில்லாப் பெருவாழ்வை எமக்கென்றும் அருள்வாய்
திருநெல்வேலியுறை காயாரோகணப் பெருமானே
அகில மெல்லாம் ஆடச்செய்யும் அதிசயனே சிவனே
அசைவில்லா நிம்மதியை தந்தருளும் பெருமானே
அகங்காரமில்லாத நல்வாழ்வை எமக்கென்றும் அருள்வாய்
திருநெல்வேலியுறை காயாரோகணப் பெருமானே
யாழ்ப்பாண தமிழ் மண்ணில் கோயில் கொண்ட சிவனே
வாழ்வுக்கு நலம் தந்து வாழவைக்கும் பெருமானே
தாழ்வில்லா உயர்வாழ்வை எமக்கென்றும் அருள்வாய்
திருநெல்வேலியுறை காயாரோகணப் பெருமானே
நீலாட்சி அம்மை அருகமர்ந்த சிவனே
நீங்காத நல்லருளை தந்தருளும் பெருமானே
மங்களமாய் வாழும் வழி எமக்கென்றும் அருள்வாய்
திருநெல்வேலியுறை காயாரோகணப் பெருமானே
தமிழ் மொழியைத் தரணிக்குத் தந்தவனே சிவனே
தயங்காது முன்சென்று வாழவைக்கும் பெருமானே
தடுமாறா நேர் வாழ்வை எமக்கென்றும் அருள்வாய்
திருநெல்வேலியுறை காயாரோகணப் பெருமானே
கௌரவமாய் நாம் வாழ வழியமைக்கும் சிவனே
கலக்கமிலாலா மனவுறுதியுடன் வாழவைக்கும் பெருமானே
தீமைகள் அண்டாத வாழ்வை எமக்கென்றும் அருள்வாய்
திருநெல்வேலியுறை காயாரோகணப் பெருமானே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.